சொத்து வரியை தமிழகத்தில் உயர்த்தப்போவதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில், மூத்த தலைவர் ஓபிஎஸ், தன்னுடைய கண்டனத்தை பதிவு செய்துள்ளார். இதுகுறித்து புதிய கோரிக்கை ஒன்றை தமிழக அரசுக்கும் விடுத்துள்ளார்.
மத்திய அரசால் அமைக்கப்பட்ட 15வது நிதி ஆணைய பரிந்துரைப்படி உள்ளாட்சி அமைப்புகளில், உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சிக்கு ஏற்றவாறு ஆண்டுதோறும் சொத்து வரியை உயர்த்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சொத்து வரி: கடந்த 2022 – 23ம் நிதியாண்டில், 600 சதுரடிக்கு குறைவான குடியிருப்புகளுக்கு, 25 சதவீதமும், 601 – 1,200 சதுரடி வரை என்றால், 50 சதவீதமும், 1,201 – 1,800 சதுரடி குடியிருப்பு கட்டடங்களுக்கு, 75 சதவீதமும், 1,800 சதுரடிக்கு மேலாக இருந்தால், 100 சதவீதமும் சொத்து வரி உயர்த்தப்பட்டது.
இதுபோலவே, வணிக பயன்பாட்டு கட்டடங்களுக்கு, 100 சதவீதமும்; தொழிற்சாலை, கல்வி நிலைய பயன்பாட்டு கட்டடங்களுக்கு, 75 சதவீதமும் உயர்த்தப்பட்டது. அதற்கு பிறகு சொத்துவரி உயர்த்தப்படவில்லை. அதிலும், சென்னை, நெல்லை, துாத்துக்குடி உள்ளிட்ட மாவட்ட மக்கள் கடந்த 2023ல் வெள்ள பாதிப்பால் சொத்து வரியை உயர்த்தவில்லை.
நிர்வாகத்துறை: எனவேதான், நிதி பற்றாக்குறை போன்ற காரணங்களால், வரும் 2025 – 26ம் நிதியாண்டில் சொத்து வரியை, 6 சதவீதம் உயர்த்த, நகராட்சி நிர்வாகத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்தவகையில், சொத்து வரி 6 சதவீதம் உயர்த்தப்பட வாய்ப்பிருப்பதாகவும், இதற்காக அரசின் அனுமதி கோரப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகி வருகிறது.
இதற்குதான் முன்னாள் முதலமைச்சரும், தமிழகத்தின் மூத்த தலைவருமான ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.. திமுக விரக்தியின் விளிம்பிற்கு மக்களை அழைத்துச் அழைத்து செல்கிறது என்று விமர்சித்துள்ள ஓபிஎஸ், சொத்து வரி உயர்வு தொடர்பாக அறிக்கையையும் வெளியிட்டுள்ளார். அதில் தெரிவித்துள்ளது:
சொத்துவரி: “திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற ஓராண்டிற்குள் சொத்துவரி பன்மடங்கு உயர்த்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து, மின் கட்டண உயர்வு, வாகன வரி உயர்வு, வழிகாட்டி மதிப்பு உயர்வு, பால் விலை உயர்வு, பால் பொருட்களின் விலை உயர்வு, பதிவுக் கட்டண உயர்வு, முத்திரைத்தாள் கட்டண உயர்வு, கட்டுமானப் பொருட்கள் விலை உயர்வு, அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வு என பல்வேறு உயர்வுகளை தமிழக மக்கள் தொடர்ந்து சந்தித்துக் கொண்டே வருகின்றனர்.
இது போதாது என்று, ஆண்டுக்காண்டு மின் கட்டணத்தையும், சொத்து வரியையும் உயர்த்த திமுக அரசு வழிவகை செய்துள்ளது. இதுபோன்ற தொடர் உயர்வுகள் தமிழக மக்களின் வாழ்வாதாரத்தை கடுமையாக பாதித்துள்ளன.
உள்ளாட்சி அமைப்பு: வரும் ஏப்ரல் மாதம் முதல் 6 விழுக்காடு வரை சொத்து வரியை உயர்த்திக் கொள்ள அனுமதி அளிக்குமாறு உள்ளாட்சி அமைப்புகள் தமிழ்நாடு அரசிடம் கோரிக்கை வைத்துள்ளதாகவும், அனுமதி கிடைத்தவுடன் சொத்து வரியை உயர்த்துவதற்கான நடவடிக்கைகளை உள்ளாட்சி அமைப்புகள் எடுக்க உள்ளதாகவும் மீடியாக்களில் செய்தி வந்துள்ளது.
திமுக அரசின் இந்த நடவடிக்கை காரணமாக பாதிக்கப்படுபவர்கள் ஏழையெளிய மக்கள்தான். சொத்து வரி மூலம் ஏற்படும் இழப்பினை சரி செய்யும் வகையில், வீட்டு உரிமையாளர்கள் வீட்டு வாடகையினை உயர்த்தும் நிலைமை உருவாகும்.
விரக்தியின் விளிம்பு: இது மட்டுமல்லாமல், வணிகர்களும் தங்கள் பொருட்களுக்கான விலையையும், சேவைகளுக்கான கட்டணத்தையும் உயர்த்தும் சூழ்நிலை உருவாகும். தொடர்ந்து மக்களுக்கு துன்பங்களை கொடுக்கின்ற அரசாக திமுக அரசு விளங்கிக் கொண்டிருக்கின்றது. விடியலை நோக்கி என்று சொல்லி ஆட்சிக்கு வந்த தி.மு.க. விரக்தியின் விளிம்பிற்கு மக்களை அழைத்துச் சென்று கொண்டிருக்கிறது.
வீட்டு உரிமையாளர்கள் மீது வரி விதிக்கப்படுகிறது என்றாலும், பாதிக்கப்படுபவர்கள் ஏழையெளிய மக்கள்தான் என்பதை நன்கு அறிந்தும், தி.மு.க. அரசு வீட்டு வரியினை உயர்த்துவது கடும் கண்டனத்துக்குரியது.
நிராகரிக்க வேண்டும்: ஏழையெளிய மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, சொத்து வரியை 6 விழுக்காடு உயர்த்திக் கொள்ள உள்ளாட்சி அமைப்புகள் கோரியுள்ள அனுமதியினை நிராகரிக்க வேண்டுமென்று ஸ்டாலினை அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.