Marks in rain damaged roads

கோவை சுரங்க பாதையில் மழை பாதித்த இடங்களில் கலர் மார்க் – செந்தில் பாலாஜி

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் பருவ மழை முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் இன்று (அக்டோபர்.15) நடைபெற்றது.

இதில் மாவட்ட ஆட்சியர் கிராந்தி்குமார் பாடி, மாநகராட்சி ஆணையர் சிவகுருபிரபாகரன், கோவை எம்பி ராஜ்குமார், மேயர் ரங்கநாயகி மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர், பருவமழை முன்னெச்சரிக்கை குறித்து முதல்வர், துணை முதல்வர் வழிகாட்டுதல் கொடுத்துள்ளதாகவும் கோவையில்
இரு தினங்களில் பெய்த மழை காரணமாக மக்களுக்கு எந்த விதமான பாதிப்பும் இல்லாத வகையில் சிறப்பான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

பெரிய அளவில் மழை பெய்தாலும் ஒரு சில மணி நேரங்களில் மழை நீர் அகற்றப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். மழை பாதிப்புகள் குறித்த செய்திகளை வெளியிடுவதை போலவே, அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் குறித்தும் ஊடகங்கள் செய்திகள் வெளியிட வேண்டுமென்றார்.

கோவையில் மழை நீர் தேங்கும் இடங்கள் என 6 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளதாகவும் அந்த இடங்களில் தண்ணீர் தேங்காமல் இருப்பதற்கான தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். மேலும் சுரங்கப்பாதைகளில் மழை நீர் பாதிப்பு இருக்கும் இடங்களில் எந்த வாகனம் செல்ல முடியும் என்பதை தெரிவிக்கும் விதமாக கலர் மார்க் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது என கூறினார்.

ஏற்கனவே மின்சார துறை பருவமழையை எதிர்கொள்ள தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் சென்னை, கோவை உட்பட அனைத்து இடங்களிலும் மின் விநியோகத்தில் பாதிப்பு இருக்காது என்றார்.

மேலும் உயிரிழப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கைகள் எடுக்கபடுவதாகவும்
மின் கம்பிகள் அறுந்து உயிர் சேதம் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக முன்னெச்சரிக்கையாக ஒரு சில இடங்களில் மின்தடை ஏற்படுத்தபடுகின்றது என்றார்.
மின்சாரம் தாக்கி உயிரிழப்புகள் என்பது கடந்த காலங்களை விட தற்போது குறைந்திருக்கிறது எனவும்,வரும் ஆண்டுகளில் இது போன்ற பாதிப்புகள் இருக்காது என தெரிவித்தார்.

தமிழகம் முழுவதும் மின்வாரிய அதிகரிகள் மற்றும் உயர் அதிகாரிகள் கொண்ட வாட்ஸ் அப் குழுக்கள் ஏற்படுத்தபட்டு பாதிப்புகள் குறித்த தகவல்கள் பகிர்ந்து கொள்ளப்பட உள்ளது என கூறினார். அரசியலுக்காக சிலர் பழைய வீடியோக்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருவதாக தெரிவித்தார்.

தமிழகத்தில் அதிக முறை முதல்வர் சுற்றுபயணம் செய்த மாவட்டம் கோவை தான் என தெரிவித்த அவர் கோவை மக்களுக்கு அளவு கடந்த திட்டங்களை கொடுத்தவர் முதல்வர், சென்னைக்கு இணையாக வேகமாக வளர்ந்து வரும் நகரமாக கோவை இருக்கிறது என்றார்.

234 தொகுதிகளையும் தனது தொகுதியாக நினைத்து முதல்வர் செயல்படுவதாகவும், வரக்கூடிய காலத்தில் இன்னும் அதிக திட்டங்கள் கோவைக்கு வரும் என்றார். துணை முதல்வர், அமைச்சர்கள் ஆய்வு கூட்டங்கள் தொடர்ந்து நடந்தி கொண்டு தான் இருக்கின்றனர், பணிகள் தோய்வின்றி நடக்க அமைச்சர்கள் ஆய்வு கூட்டங்களை நடத்தி வருகின்றனர் என தெரிவித்த அவர், செய்தி வெளியிட வேண்டும் என்பதற்காக எடப்பாடி பழனிச்சாமி ஆய்வுகூட்டங்கள் குறித்து பேசி இருப்பதாக தெரிவித்தார்.

Report

Leave a Reply