கோவை மருதமலை முருகன் கோயிலில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகள் மற்றும் உயர்ந்த முருகன் சிலை அமைப்பது தொடர்பாகவும், கோயிலை ஒட்டி உள்ள ஆக்கிரமிப்பு பிரச்சினைகள் குறித்து இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இன்று (ஜனவரி 27) ஆய்வு மேற்கொண்டார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், "தமிழ் கடவுள் முருகன் கோயில்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. 90 முருகன் கோயில்களில் குடமுழுக்கு நடந்துள்ளது. திமுக ஆட்சிக்கு பிறகு, 60-70 வயதுடைய மூத்த குடிமக்களுக்கு அரசு செலவில் சிறப்பு தரிசனம் வழங்கப்பட்டு வருகிறது," என்று கூறினார்.
பழனி, திருச்செந்தூர், திருத்தணி, மருதமலை உள்ளிட்ட ஏழு முக்கிய முருகன் கோயில்களில் பெருந்திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மருதமலை கோயிலில் முடி காணிக்கை மண்டபம் மற்றும் அன்னதான கூடம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. பக்தர்கள் அதிகரித்து வருவதால் புதிய வசதிகள் செய்து வருகிறோம். லிப்ட் வசதி மே மாதத்தில் பயனுக்கு வரும்.
மருதமலை முருகன் கோயிலில் 180 அடி உயர கல்லால் ஆன முருகன் சிலை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது ஆசியாவில் அதிக உயரம் கொண்ட சிலையாக அமையும். சாத்தியக் கூறுகள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.
வெள்ளியங்கிரி கோயிலுக்கு விரைவில் அறங்காவலர்கள் நியமிக்கப்பட உள்ளனர். அங்கு 21 கோடி ரூபாய் செலவில் பல்வேறு பணிகள் நடைபெற்றுள்ளன. மலை ஏறுபவர்களுக்கு மருத்துவ சேவைகள் மேம்படுத்தப்படும்.
தைப்பூச திருவிழாவை முன்னிட்டு கூடுதல் அன்னதானம் வழங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது. அன்னதான பிரபு ஆக முதல்வர் திகழ்கிறார். இதுகுறித்த கட்டுப்பாடுகளின் மீதான அறிவிப்பு விரைவில் வெளியாகும்.
மேலும், கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயிலில் அன்னை தமிழில் குடமுழுக்கு நடைபெறும் என தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.