கிணத்துக்கடவு அருகே உள்ள, வடசித்தூர் பகுதியில் இருக்கும் நீரோடையில் தற்போது நீர்வரத்து உள்ளது. இதன் அருகில் உள்ள ரோட்டில், வாகன போக்குவரத்து அதிகம் உள்ளது. ரோட்டில் பயணிக்கும் மக்கள், நீரோடையை ரசித்தபடி செல்கின்றனர். சிலர் ஆபத்தை உணராமல் நீரோடையில் இறங்குகின்றனர்.
இந்த ரோடு குறுகலாக இருப்பதால், பெரிய வாகனங்கள் செல்ல முடியாத நிலை உள்ளது. மற்றும் அவசர நிலைக்கு முந்திச் செல்லவும் சிரமம் ஏற்படுகிறது. முந்தி செல்ல முயற்சி செய்யும்போது நீரோடையில் வாகனம் கவிழ்ந்து விடுமோ என்ற அச்சத்தில் மெதுவாக பயணிக்கும் சூழ்நிலை உள்ளது.
எனவே, அசம்பாவிதத்தை தவிர்க்கும் வகையில், பொதுமக்கள் நலன் கருதி ரோட்டோரத்தில் தடுப்புகள் அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் நீரோடையின் மற்றொரு பகுதியில் வளர்ந்திருக்கும் புதரை அகற்றம் செய்து, தூய்மைப்படுத்த வேண்டும், என, வாகன ஓட்டுநர்கள் இன்று ஜன.21 கோரிக்கை வைத்துள்ளனர்.