நாட்டின் 76வது குடியரசு தினத்தை முன்னிட்டு, கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்தி குமார்பாடி வ.உ.சி மைதானத்தில் (ஜனவரி.26) தேசிய கொடியை பறக்கவிட்டார்.
மூவண்ண பலூன்களை பறக்கவிட்டதுடன், சமாதானத்தை உணர்த்தும் விதமாக வெண் புறாக்களையும் பறக்கவிட்டார். பின்னர் காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். அணிவகுப்பின் தலைவர்களும் அறிமுகப்படுத்தப்பட்டனர்.
சுதந்திர போராட்ட தியாகிகள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு சிறப்பு செய்யப்பட்டது. மேலும் மாவட்டத்தில் சிறப்பாக செயல்பட்ட 142 அரசு அலுவலர்களுக்கும், 45 காவலர்களுக்கும் நற்சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. மாநகர காவல்துறையினர் 61 பேருக்கும், மாவட்ட காவல்துறையினர் 34 பேருக்கும் பதக்கங்கள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், கோவை சரக டிஐஜி ஆகியோர் கலந்து கொண்டனர். பல்வேறு பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர்.
மேலும், கோவை மாவட்ட ஆட்சியர் தனது ட்விட்டர் பக்கத்தில் குடியரசு தின விழா கொண்டாட்டம் குறித்த வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.