மகா சிவராத்திரியை முன்னிட்ட, பக்தர்கள் வெள்ளியங்கிரி மலையேறி ஈசனை தரிசிக்க பிப்ரவரி 1 முதல் மே வரை 4 மாதங்கள் அனுமதி வழங்கப்படுவதாக கோவை மாவட்ட வனத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தென்கயிலாயம் என்று பக்தர்களால் அழைக்கப்படும் வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் மேற்குத்தொடர்ச்சிமலை பூண்டியில் உள்ளது. சுயம்புவடிவில் வீற்றிருக்கும் ஈசனை தரிசிக்க கோவிலின் அடிவாரத்தில் இருந்து செங்குத்தாக உள்ள 7 மலைகளை கடந்து செல்வது அவசியம். இந்த கடினமான மலைகளை ஏறி, ஆண்டுதோறும் சிவராத்திரி உள்ளிட்ட விசேஷ தினங்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஈசனை தரிசிக்க வருகின்றனர்.
மகாசிவராத்திரி மற்றும் சித்ராபவுர்ணமி நாட்களில் தமிழகத்திலிருந்தும் வெளிமாநிலங்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் 7 மலைகளையும் ஏறி சாமி தரிசனம் செய்வார்கள்.
2025 ஆம் ஆண்டின் மகாசிவராத்திரி அடுத்த மாதம் 26-ந்தேதி வருகிறது. இதனையொட்டி, வெள்ளியங்கிரி மலையேறி பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய ஏதுவாக, வனத்துறையினர் அனுமதி வழங்கியுள்ளனர். பிப்ரவரி 1 முதல் மே மாதம் இறுதி வரை பக்தர்கள் வெள்ளியங்கிரி மலையேறலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மலையேறும் பக்தர்கள் பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் எளிதில் தீப்பிடிக்கும் பொருட்கள் ஆகியவற்றை கொண்டு செல்ல அனுமதிக்கப்படமாட்டாது. எனவே, பக்தர்கள் அவ்வாறான பொருட்களை கொண்டு வருவதை தவிர்க்க வேண்டும் என்று வனத்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.
வெள்ளியங்கிரி கோவிலும் மலையேறும் பாதைகளும் பக்தர்களின் அதிக கூட்டத்தை எதிர்நோக்கியுள்ளதால், கோவில் நிர்வாகம், வனத்துறை மற்றும் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரமாக செய்து வருகின்றனர்.