recruitment

கோவை மாவட்ட ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு - மாவட்ட காவல்துறை அறிவிப்பு

கோவை மாவட்ட காவல்துறை நேற்று ஜன.20 வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், கோவை மாவட்ட ஊர்க்காவல் படை அமைப்பில், 74 ஆண் ஊர்க்காவல் படை ஊழியர்கள் தேர்வு செய்யப்பட வேண்டி உள்ளது. இதற்காக ஊர்க்காவல் படையில் சேர விருப்பம் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான விண்ணப்பங்கள், தொடர்புடைய காவல் நிலையங்கள் மற்றும் ஊர்க்காவல் படை அலுவலகம் மேட்டுப்பாளையம், பெரியநாயக்கன்பாளையம் மற்றும் பொள்ளாச்சி ஆகிய இடங்களில் இருந்து நாளை முதல் இம்மாதம், 31ம் தேதி வரை இலவசமாக பெற்றுக் கொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை தங்களது எல்லைக்கு உட்பட்ட காவல் நிலையத்திலோ அல்லது கோவை மாவட்ட காவல் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள அதற்கான பெட்டியில் (பிப்ரவரி.5) ஆம் தேதிக்குள் மாலை, 5:00 மணிக்குள் சேர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். அதற்கு பின்னர் வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.

விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு டிசம்பர்.31, 2024ஆம் தேதி அன்று, 18 வயது பூர்த்தியானவராகவும், 50 வயதுக்குள் உள்ளவராகவும் இருக்க வேண்டும். நல்ல உடல் தகுதி, நன்னடத்தை உடையவராகவும் இருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம், 10ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்வி பெற்றவராக இருத்தல் வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் கல்வி தகுதிக்கான 'டி.சி.,' அல்லது மதிப்பெண் பட்டியல் நகல், ஆதார் அட்டை நகல், வசிப்பிட முகவரிக்கான அத்தாட்சி மற்றும் குடும்ப அட்டை நகல் இணைக்கப்பட வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் தமிழ்நாட்டில் வசிப்பவராகவும், கோவை மாவட்ட காவல்துறையின் கீழ் உள்ள காவல் நிலைய எல்லையில் வசிப்பவராக இருக்க வேண்டும்.

ஊர்க் காவல் படையில் குறைந்தது மூன்று ஆண்டுகள் பணிபுரிய விருப்பம் உடையவர்களாக இருத்தல் வேண்டும்.

மத்திய, மாநில அரசு ஊழியராகவோ, சுய வேலை பார்ப்பவர்களாகவோ அல்லது ஒரு நல்ல நிறுவனத்தில் பணி புரிபவர்களாகவோ இருப்பினும் விண்ணப்பிக்கலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

புகார்செய்

மறுமொழி இடவும்