Protecting Thirupparankundram

நவீன தமிழ்நாடு திராவிடத்தால் உருவானது என கூறுவது தவறு - எம்எல்ஏ வானதி சீனிவாசன் விமர்சனம்

கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் இன்று (ஜனவரி 29) வெளியிட்டுள்ள அறிக்கையில், விழுப்புரத்தில் ஜனவரி 28, 2025 அன்று வன்னியர் இடஒதுக்கீட்டிற்காக உயிர்தியாகம் செய்த தியாகிகள் மணி மண்டப திறப்பு விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் கருத்துகளை கடுமையாக விமர்சித்துள்ளார். முதலமைச்சர் ஸ்டாலின், திராவிட இயக்கம் சமூகநீதியை நிலைநாட்டுவதற்காக தோன்றியது என்றும், நவீன தமிழ்நாடு திராவிடத்தால் உருவானது என்றும் கூறியிருந்தார்.

வானதி சீனிவாசன் இந்த கூற்றை எதிர்த்து, தமிழ்நாட்டின் வளர்ச்சி திராவிட இயக்கத்திற்கு முன்னரே தொடங்கியதாகவும், ராஜாஜி, ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார், காமராஜர், எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகிய தலைவர்கள் பெரும் பங்காற்றியுள்ளதாக குறிப்பிட்டார். குறிப்பாக, காமராஜர் காலத்தில் தொடங்கப்பட்ட தொழில், பாசனம், கல்வித் துறை மேம்பாட்டுகளே தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு அடித்தளமாக அமைந்ததாக அவர் கூறினார். மேலும், 1998-2004 வாஜ்பாய் அரசிலும், கடந்த பத்தரை ஆண்டுகளாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு செயல்படுத்திய உள்கட்டமைப்பு திட்டங்களே தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு முக்கிய காரணம் என கூறினார்.

முதலமைச்சர் ஸ்டாலின், தமிழ்நாட்டின் வளர்ச்சியை திராவிட இயக்கத்திற்கே சொந்தமாக்கி, இதர தலைவர்களின் பங்களிப்பை புறக்கணிப்பதாகவும், 'திராவிடம்' என்ற பெயரில் பிரிவினையை ஏற்படுத்த முயற்சிப்பதாகவும் குற்றம் சாட்டினார். தமிழ்நாட்டில் 'திராவிடம், திராவிடர், திராவிட மாடல்' என திமுக கட்சி கூறுவது, தமிழ் மொழி, தமிழர், தமிழ்நாடு ஆகியவற்றின் அடையாளத்தை அழிப்பதற்கான ஒரு முயற்சி எனவும் அவர் கூறினார்.

தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கும் முயற்சி வாஜ்பாய் தலைமையிலான அரசின் காலத்திலேயே தொடங்கப்பட்டதாகவும், 2004ல் பாஜக கூட்டணி ஆட்சி அமைக்காததால் அது நிறைவேறவில்லை எனவும் வானதி சீனிவாசன் குறிப்பிட்டார். பின்னர், காங்கிரஸ்-திமுக கூட்டணியின்போது பல மாநில மொழிகளுக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கப்பட்டதாகவும், ஆனால் பிரதமர் மோடி, உலக அரங்குகளில் தமிழ் மொழியின் தொன்மையை பெருமைப்படுத்தி பேசுவதாகவும் கூறினார்.

"நவீன தமிழ்நாடு திராவிடத்தால் உருவானது" என்று கூறுவது, ராஜாஜி, காமராஜர், ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் உள்ளிட்ட தலைவர்களையும், தொழில்முனைவோர்களையும் அவமதிக்கும் செயல் என அவர் விமர்சித்தார். மேலும், 'திராவிட மாடல்' என்ற பெயரில் திமுக கட்சி சமூகநீதியை நிலைநாட்டுவதாக கூறினாலும், கட்சியில் பட்டியலினத்தினருக்கும், பெண்களுக்கும் முக்கிய பதவிகள் வழங்கப்படவில்லை என்பதையும் சுட்டிக்காட்டினார்.

முடிவில், முதலமைச்சர் ஸ்டாலின் பேசும் திராவிடம் என்பது, 'ஒரே கட்சி, ஒரே குடும்பம், ஒரே ஆட்சி' என மட்டுமே இருக்கிறது. குடும்ப ஆட்சி நடத்திக்கொண்டு சமூகநீதி பற்றி பேசுவதை தமிழக மக்கள் ஏற்கமாட்டார்கள். திமுகவின் உண்மையான முகத்தை மக்கள் விரைவில் உணர்வார்கள் என வானதி சீனிவாசன் தெரிவித்தார்.

புகார்செய்

மறுமொழி இடவும்